நெல்லை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு விதிமுறையை மீறி நீண்ட நேரம் கடைகளை திறந்து வைத்திருந்ததாக கூறி, போலீசார் பிடித்து சென்று தாக்கியதில் இருவரும் இறந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் ரத்த கறைகள் சாத்தான்குளம் காவல் நிலையத்திலுள்ள லாக்அப் அறை, மேஜை, லத்தி மற்றும் அவர்களை கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்ற வாகனத்தின் இருக்கைகளில் இருந்த ரத்தகறைகளின் மாதிரிகளை சிபிசிஐடி போலீசார் சேகரித்தனர்.
இதனை தொடர்ந்து முதல்வரின் உத்தரவின் பேரில் கடந்த ஜூலை 1ம் தேதி நெல்லை சிபிசிஐடி போலீசார் இவ்வழக்கினை சிபிஐ ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா தலைமையிலான 7 பேர் குழுவினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து ஜூலை 3ம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள், வழக்கு குறித்து விசாரணையை துவக்கி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கிற்கு கூடுதலாக ஆதாரங்களை திரட்டுவதற்காக சாத்தான்குளத்தில் இருந்து பென்னிக்சின் தாய் செல்வராணியை சிபிஐ ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா தலைமையிலான 4 பேர் குழுவினர் நேற்றிரவு நெல்லை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு ரத்த மாதிரி சேகரித்து அதற்கான ஆவணங்களை சீல் வைத்த கவரில் எடுத்து சென்றனர்.