×

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்ததற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனம்: கேள்வி கேட்கும் உரிமையை இழப்பதாக குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முன்னதாகவே முடித்துவைக்கப்பட்டு மார்ச் 23ம் தேதி இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 5 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது.  சமூக இடைவெளியை பின்பற்றும் நோக்கில் நாடாளுமன்றத்தில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் மாநிலங்களவை செயலகம் வெளியிட அறிவிப்பில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இடம் பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி நபர் மசோதாக்களுக்கு அனுமதி இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேள்வி நேரம் மற்றும் ஜீரோ ஹவர் தொடர்பான அறிவிப்பு ஜனநாயகத்தின் குரலை நெரிக்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

எம்பி சசி தரூர்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி சசி தரூர், அரசாங்கத்தை கேள்வி கேட்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஆக்ஸிஜன் என்று கூறியுள்ளார். மேலும், இந்த அரசாங்கம் நாடாளுமன்றத்தை ஒரு அறிவிப்பு பலகையாக குறைக்க முற்படுகிறது. தாங்கள் நிறைவேற்ற விரும்புவதை நிறைவேற்றுவதற்கு அரசு தனது பெரும்பான்மையை ரப்பர் ஸ்டாம்பாக பயன்படுத்த விரும்புகிறது என்றும் கூறியுள்ளார்.

எம்.பி டெரிக் ஓ பிரியன்

இதேபோல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்.பி டெரிக் ஓ பிரியன், கேள்வி நேரத்திற்கான கேள்விகளை எம்.பிக்கள் 15 நாட்கள் முன்னதாகவே சமர்பிக்க வேண்டும். கூட்டத்தொடர் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. அப்படியிருக்கையில் ஏன் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது? இதனால் அரசை கேள்வி கேட்கும் உரிமையை எதிர்க்கட்சி எம்.பிக்கள் இழக்கின்றனர். 1950ம் ஆண்டிற்கு பிறகு இதுவே முதல்முறை. பாராளுமன்றத்தின் வேலை நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. எனவே கேள்வி நேரத்தை ஏன் ரத்து செய்தீர்கள்? நோய்த்தொற்று என காரணம் காட்டி ஜனநாயகத்தைக் கொலை செய்யும் செயலில் ஈடுபட்டுள்ளது, என தமது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

எம்.பி மாணிக்கம்
 
மேலும் இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விருதுநகரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், அதிகப்படியான அதிகாரிகள் வருவதும், செல்வதும் தான் பிரச்சினையா. ஒரு நாளில் ஒன்றிரண்டு துறை சார்ந்த கேள்விகள் எழுப்ப அனுமதிக்கலாமே. இதற்காக அமைச்சர்களுக்கு உதவி செய்ய 5 முதல் 10 அதிகாரிகள் தேவைப்படுவர். அதுவே நிதின் கட்கரி போன்ற அமைச்சர்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை, என்று குறிப்பிட்டுள்ளார்.



Tags : cancellation ,Parliament ,MPs ,Opposition ,season session ,session , Parliamentary spring session, question time canceled, opposition MPs, condemned
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...