×

வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு..ஜிஎஸ்டி, கொரோனா..! மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, கொரோனா பாதிப்பு குறையாமல் இருப்பது, எல்லையில் பதற்றம் ஆகியவை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் ப.சிதம்பரம் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், ஜிடிபி எனும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதமானது, இதுவரை இல்லாத அளவுக்கு மைனஸ் 23.9 சதவீதமாக சரிவடைந்துள்ளதாக தெரிவித்திருந்தது. பொருளாதார வீழ்ச்சிக்கு மத்திய அரசின் தவறான கொள்கைகள்தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ராகுல் காந்தி ஆகியோர் விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில், மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் மீண்டும் குற்றச்சாட்டுகளை வைத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று விமர்சனம் வைத்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி மைனஸ் 23.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு. 12 கோடி வேலையிழப்புகள். மத்திய அரசு தனது ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்குச் செலுத்தவில்லை. உலகிலேயே மிக அதிகமாக நாள்தோறும் புதிதாக கொரோனா நோயாளிகள் உருவாகி வருகிறார்கள். எல்லையில் வெளிநாட்டுப் படைகளின் அத்துமீறல் இருந்து வருகிறது, என குற்றம்சாட்டியுள்ளார்.


Tags : disasters ,Corona ,Rahul Gandhi ,India ,Modi , Unemployment, GST, Corona, Modi, India, Rahul Gandhi
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...