ஈரோடு: இ-பாஸ் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக, ஈரோடு மாநகரில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டயமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் இ-பாஸ் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டு, இ-பாஸ் இல்லாமலேயே வாகனங்களில் அனைத்து மாவட்டத்திற்கும் செல்லலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளிலும் வாகன போக்குவரத்து அதிகரித்தது.
இதில், ஈரோடு-நாமக்கல் மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் போலீசார் கெடுபிடி இல்லாததால், நேற்று அதிகாலை முதல் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால், ஈரோடு மாநகரில் முக்கிய சந்திப்புகளான பன்னீர்செல்வம் பார்க், அரசு மருத்துவமனை ரவுண்டானா, ஸ்வஸ்திக் கார்னர், கருங்கல்பாளையம், மூலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து இருந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.