பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே களரம்பட்டி கிராமத்தில் வசித்தவர் ராமசாமி (75). இவரது மனைவி அஞ்சனா (69). இவரது 3 மகன்களில் மூத்தமகன் கந்தசாமி இறந்து விட்டார். கடைசி மகன் அழகேசன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். 2வது மகன் பாலகிருஷ்ணனுடன் (40) பெற்றோர் தங்கியிருந்தனர். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் நேற்றுமுன்தினம் பகல் 12 மணியளவில் ராமசாமி வீட்டிலேயே இறந்தார். அவரது விருப்பப்படி அருகில் உள்ள காலிமனையில் தந்தையை அடக்கம் செய்ய பாலகிருஷ்ணன் குழி தோண்டியுள்ளார். இதை அக்கம்பக்கத்தினர் தட்டிக்கேட்டனர்.
இதையடுத்து பாலகிருஷ்ணன், நேற்று அதிகாலை வீட்டின் உள்ளே சுவரோரம் தந்தையை அமரவைத்த நிலையில், சுற்றிலும் இரண்டரை அடி நீள, அகல, உயரத்தில் செங்கற்களால் சுவர் அமைத்து ஹாலோ பிளாக் சிலாப்களால் மூடி அடக்கம் செய்து மேலே விளக்கை வைத்து விட்டார். தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் வந்து இறந்தவரின் உடலை வீட்டில் அடக்கம் செய்யக்கூடாது என தெரிவித்தும், பாலகிருஷ்ணன் கேட்கவில்லை. என் தந்தை விருப்பப்படி நான் எனது வீட்டிற்குள் புதைத்துள்ளேன் என்றார். வீட்டுக்குள் அடக்கம் செய்தால்தான் கணவரின் ஆத்மா சாந்தியடையும் என அஞ்சனா கூறினார். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து அந்த ஊழியர்கள் மூலம் சமாதியை இடித்து உடலை மீட்டு மயானத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடல் தகனம் செய்யப்பட்டது.