×

என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கரின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்க!: எழும்பூர் மாஜிஸ்திரேட்டுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கரின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்னை அயனவரத்தை சேர்ந்த ரவுடி சங்கர் மீது கொலை முயற்சி, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், அவரை பிடிக்க சென்ற காவலர்களை தாக்கியதாக கடந்த 21ம் தேதி என்கவுன்டரில் கொல்லப்பட்டார். ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கை அயனாவரம் காவல் நிலையத்தில் இருந்து சி.பி.சி.ஐ.டி. அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி அவரது தாயார் கோவிந்தம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

தனது மகனின் உடலை மறு கூறாய்வு செய்ய வேண்டும் என்று மனுவில் அவர் கோரிக்கைவிடுத்திருக்கிறார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக  மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் தேசிய மனித உரிமை ஆணைய வழிமுறைப்படி, மாஜிஸ்திரேட் முன்னிலையில், 3 பேர் அடங்கிய மருத்துவ குழு உடல் கூறாய்வு செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் உடல் கூறாய்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதலில் உடலை வாங்க உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மறுநாள் உடல் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து உடல் கூறாய்வு செய்யப்பட்ட வீடியோ, பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆகியவை மாஜிஸ்திரேட் வசம் உள்ளதாகவும் ஆதலால் மறு பிரேத பரிசோதனை செய்ய அவசியமில்லை எனவும் எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோல அயனாவரம் காவல் நிலைய வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அது தொடர்பான உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அவர் வாதத்தின் போது குறிப்பிட்டார்.

ஆனால் பிரேத பரிசோதனையின் போது சங்கரின் குடும்பத்தார் அருகில் இல்லாததால் மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு எழும்பூர் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கில் தாமாக முன்வந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரையும் இணைத்து அவர்கள் வருகின்ற 4ம் தேதி பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

Tags : Rowdy Shankar ,Magistrate ,Egmore ,Igmore ,High court ,Egmore Magistrate , Rowdy Shankar's, autopsy report,encounter !: Egmore Magistrate ,
× RELATED சென்னை எழும்பூரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..!!