கன்னியாகுமரி: இ - பாஸ் விவகாரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் பழைய நடைமுறையை கடைபிடிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பலகட்ட ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இதில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ - பாஸ் நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
மேலும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு மட்டுமே இ - பாஸ் நடைமுறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நெல்லை-கன்னியாகுமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் வழக்கம் போல் இ - பாஸ் நடைமுறைகள் செயல்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ - பாஸ் நடைமுறை எதற்கு? என அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து எந்த வித அறிவிப்பும் வராத நிலையில், இ - பாஸ் சோதனை தொடரும் என கூறியுள்ளனர். மேலும் சோதனைச்சாவடியில் கொரோனா பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தமிழக அரசு ரத்து செய்துள்ள நிலையில், இ - பாஸ் நடைமுறை கடைபிடிக்கப்படுவதால், ஆத்திரமடையும் வாகன ஓட்டிகள் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.