சென்னை: ரிசர்வ் வங்கியில் மாநில அரசு கடன் வாங்கி கொள்ளுமாறு மத்திய நிதியமைச்சர் சொல்லுவது சட்டத்திற்கு புறம்பானது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை அருகே ஆவடியில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ஜி.எஸ்.டி நிலுவை தொகை கேட்டு மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியது தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழக அரசு கேட்டுள்ள 12 ஆயிரம் கோடி நிலுவை தொகை என்பது சட்டப்படி மத்திய அரசு வழங்க வேண்டிய தொகை என்றார்.
இதனை விடுவிக்காமல் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக்கொள்ளுமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராம் கூறுவது முற்றிலும் தவறானது என்றார். அதாவது கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற 41வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில அரசுகள் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெற்று கொள்ளலாம். மேலும் மாநிலங்களுக்கு கடன் வழங்க, ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு வலியுறுத்தும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இதற்கு தற்போது அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் அதிமுக, பாஜக கூட்டணியில் இருதரப்பிலும் முரண்பட்ட கருத்துக்கள் கூறி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் கூறியதற்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.