கும்மிடிப்பூண்டி: எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி வழியாக பீகார், ஒரிசா, அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து சரக்கு வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில், ஊரங்கு தளர்வையொட்டி கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பேட்டைகளில் 100% ஆட்களை வைத்து வேலை செய்யலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சொந்த ஊருக்கு சைக்கிள், பஸ் மற்றும் ரயில்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு சென்றிருந்த வடமாநில இளைஞர்களை, தொழிற்சாலை நிறுவனங்கள் வேலை வர அனுமதியளித்துள்ளது.
அதன்படி, ஜார்க்கண்ட், பீகார், ஒரிசா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மாநிலங்களில் இருந்து தனியார் பேருந்து மூலம் தமிழக - ஆந்திர எல்லையான எளாவூர் சோதனை சாவடி வழியாக தமிழகத்துக்கு ஏராளமான வடமாநிலத்தவர்கள் வருகின்றனர். இவ்வாறு, நூற்றுக்கணக்கில் வரும் வடமாநிலத்தவர்களை சமூக இடைவெளியின்றி சீட்டில் அமர வைத்துள்ளனர். மேலும், அவர்களுக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யாமல் அனுமதிக்கின்றனர். இதனால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, எளாவூர் சோதனைச்சாவடிக்கு சிறப்பு அதிகாரியை நியமித்து மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்ற மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.