சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் சாயி பல்கலைக்கழகத்தின் ரூ.600 கோடி கட்டிடத்திற்கு முதல்வர் எடப்பாடி நேற்று அடிக்கல் நாட்டினார். தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னையில் கடந்த 2019 ஜனவரி 23 மற்றும் 24ம் தேதிகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, சாயி பல்கலைக்கழகம் நிறுவுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறைக்கும், சாயி கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் அறக்கட்டளை நிறுவனத்திற்கும் இடையே 24.1.2019 அன்று முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சாயி பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவில் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி, மூத்த வழக்கறிஞர், கல்வி மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். சாயி பல்கலைக்கழகம் முதற்கட்டமாக முதல் 7 ஆண்டுகளில் ரூ.600 கோடி முதலீட்டில் 12 லட்சம் சதுர அடி கட்டிட பரப்பளவில் 6000 மாணவர்களுடன், 300 உறுப்பினர்களை கொண்ட பேராசிரியர்கள் குழு மற்றும் 300 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாக பணியாளர்களைக் கொண்டும் இயங்கவும், இரண்டாம் கட்டமாக, அடுத்த 5 ஆண்டுகளில் 30 லட்சம் சதுர அடி கட்டிட பரப்பளவில் 20,000 மாணவர்களுடன், 1,000 உறுப்பினர்களை கொண்ட பேராசிரியர்கள் குழு மற்றும் 1,000 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாக பணியாளர்களைக் கொண்டு முழு திறனுடன் இயங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், பென்ஜமின், தலைமைச் செயலாளர் க.சண்முகம், உயர்கல்வித் துறை செயலாளர் செல்வி அபூர்வா, சாயி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் கே.வி.ரமணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.