புதுடெல்லி: நீதிமன்ற உத்தரவை மீறி பணப்பரிவர்த்தனை செய்த விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி விஜய் மல்லையா தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் பிரிட்டனில் தலைமறைவாக உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, நீதிமன்ற உத்தரவை மீறி தனது பிள்ளைகளின் வங்கிக் கணக்கிற்கு ரூ.300 கோடி பணத்தை மாற்றிவிட்டதாக வங்கிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மல்லையா குற்றவாளி என கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பளித்தது.
இதனை மறுஆய்வு செய்யக்கோரி விஜய் மல்லையா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், சீராய்வு செய்ய எந்தவிதமான அடிப்படை முகாந்திரமும் கிடையாது எனக்கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக இதுதொடர்பான மனு ஏன் பட்டியலிடப்படாமல் உள்ளது என நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்திற்கும் நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.