திருவொற்றியூர்: தண்டையார்பேட்டை துர்காதேவி நகரை சேர்ந்த விஜய் (17), சுந்தரம்பிள்ளை நகரை சேர்ந்த ராகுல் டிராவிட் குமார் (17), ஷேக் (17) ஆகிய 3 பேரும் நண்பர்கள். பிளஸ் 2 படித்துவிட்டு, பிரபல செல்போன் நிறுவன சிம் கார்டுகளை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் 3 பேரும் நேற்று திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் கடற்கரை பகுதிக்கு வந்தனர். அங்கு விஜயும், ராகுல் டிராவிட் குமாரும் கடலில் குளித்தனர். ஷேக் கரையில் அமர்ந்து இருந்தார்.
அப்போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி விஜயும், ராகுல் டிராவிட் குமாரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதை பார்த்த ஷேக், காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள். என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று உயிருக்கு போராடிய ராகுல் டிராவிட் குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார். மற்றொரு மாணவன் விஜயை நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான விஜயை தேடி வருகின்றனர்.