மதுரை: ஆம்புலன்ஸ் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் விரைவாக மருத்துவமனைக்கு செல்லும் வகையில் முன்கூட்டியே அறிவிப்பு செய்யும் கருவியை கண்டுபிடித்த மதுரையை சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதாவது புதிய கருவியை கண்டுபிடித்தவர்கள் மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த வஞ்சி நகர் கிராமத்தை சேர்ந்த பாலசந்தர் மற்றும் பாலகுமார் ஆகிய இரட்டை சகோதரர்கள் ஆவர். இவர்கள் மேலூர் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாணவர்கள் இருவரும் இணைந்து ஆம்புலன்ஸ் வருவதை முன்கூட்டியே காட்டும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது ஜி.பி.எஸ் மற்றும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் 2 கி.மீ தொலைவு வரும் முன்னதாகவே, போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அறிவிப்பை அளிக்கும். இதன் அடிப்படையில், ஆம்புலன்ஸ் செல்லும் பாதையில் வாகன நெரிசலை சரிசெய்யும் அறிவிப்பு குறிப்பிட்ட சிக்னலில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.
தங்களின் தந்தை கண்ணன் விபத்து ஒன்றில் சிக்கி கால தாமதமாக ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு சென்றதால், உயிரிழந்து விட்டார். இதனையடுத்து காலதாமதத்தால் இனி எந்த உயிரிழப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இரட்டை சகோதரர்களின் கண்டுபிடிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அனைவரும் பாராட்டி வருகின்றனர்.