டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுகள் பரவலாக பலரை பாதித்துள்ளன. பல்வேறு மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், என மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா பாதிப்பு தொற்றிக்கொண்டது.
இதனிடையே கடந்த 2ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அமித்ஷா தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
இதன்பின்னர் அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதன்பின்னர் அமித்ஷா, தனது டுவிட்டரில் கொரோனா பாதிப்பில் இருந்து தான் குணமடைந்து விட்டதாக தெரிவித்திருந்தார். கடந்த 18ம் தேதி காலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உடல் சோர்வு மற்றும் உடல் வலி, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதன் பலனாக அவர் தற்போது குணமடைந்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.