புதுடெல்லி: ‘நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகள், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு நடப்பதற்கு சாத்தியமில்லை,’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது உலகின் மிகப்பெரிய நிர்வாக மற்றும் புள்ளிவிவர நடவடிக்கைளில் ஒன்றாகும். 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், இந்த கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அமைந்துள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விவரங்களை சேகரிப்பார்கள்.
இந்த ஆண்டு மக்கள் தொகை மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்படவில்லை. இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “மக்கள் தொகை கணக்கெடுத்தல் என்பது தற்போது மிகவும் அவசியமான ஒன்று கிடையாது. ஒரு ஆண்டு தாமதமானாலும் அதனால் எந்த பாதிப்பும் இல்லை,” என்றார்.