×

பஸ்சில் செல்ல என்ன கட்டுப்பாடு? போக்குவரத்துத்துறை அதிகாரி தகவல்

சென்னை: சென்னையில் நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரசு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்து நாளை முதல் தொடங்குகிறது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் வகுத்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசு உத்தரவுப்படி நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அப்போது அதிகபட்சமாக பஸ்களில் அனுமதிக்கக்கூடிய மொத்த பயணிகள் இருக்கை எண்ணிக்கையில் 50 சதவீதம் மட்டுமே. பயணிகளின் இருக்கை மற்றும் நிற்பதற்கான இடங்களில் தனிநபர் இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்படும்.

பயணிகள் பஸ்சில் ஏறுவதற்கு பின்புற வழியையும், இறங்குவதற்கு முன்புற வழியையும் பயன்படுத்துவதற்கும் உடல்ரீதியான தொடர்புகளை தவிர்க்கவும் அறிவுரை வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு முறையும் பேருந்து இயக்கத்திற்கு பிறகு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். பயணிகள் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பஸ்சில் ஏறி, இறங்கும்போதும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அனைத்து டிரைவர்கள் மற்றும் பிற உள் ஊழியர்கள் தங்களது ஷிப்ட்டை துவங்குவதற்கு முன்பு உடல் வெப்பநிலையை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மேலும் முகக்கவசம், சானிடைசர் ஆகியவை வழங்கப்படும். பயணிகள் சானிடைசரை பயன்படுத்தும் வகையில், அவர்களுக்காவும் சானிடைசர் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Get on the bus, what control ?, Transportation Officer, Information
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...