×

நிதி ஆதாரத்தின் ரத்த ஓட்டம் தடைப்பட்டுள்ளதால் இஎம்ஐயை மேலும் 6 மாதம் தள்ளி வைக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: “ரொக்கப்பணம் அல்லது வருமானம் என்ற நிதி ஆதாரத்தின் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நிற்பதை உள் மனதில் வாங்கி, இஎம்ஐ செலுத்துவதை மேலும் 6 மாதம் தள்ளி வைக்க வேண்டும்” என்று ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: “வங்கிகளில், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை (இஎம்ஐ) செலுத்தும் கால அவகாசம், ஆகஸ்ட் 31ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது” என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாக வரும் செய்திகள், கொரோனா பேரிடரால்- வேலை இழந்து, சம்பளக் குறைப்புக்கு உள்ளாகியுள்ளோருக்கும், தொழில் முடங்கிப் போயிருக்கும் நிறுவனங்களுக்கும்-குறிப்பாக, சிறு,குறு,நடுத்தர நிறுவனங்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம்  அளிப்பதாக இருக்கிறது.

“கொரோனாவால் இந்தியப் பொருளாதாரம் நொறுங்கிப் போன நிலையில் இருக்கிறது”-“தடுக்க முடியாமல் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது” - “கொரோனாவுடனான போராட்டம் தீவிரமாக இருக்கிறது” என்றெல்லாம் ரிசர்வ் வங்கியின் ‘பணவியல் கொள்கைகள் வகுக்கும் குழு’ கூட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் பேசியிருப்பது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் சக்திகாந்ததாஸ் தான். ஆகவே, கொரோனாவின் தாக்கம் எந்த அளவிற்குத் தீவிரமாக இருக்கிறது-தனிநபர் வருமானம் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதெல்லாம் அவருக்குத் தெரிந்திருந்தும் - “கடன் தவணைகள் திருப்பிச் செலுத்தும் சலுகை நீட்டிக்கப்படாது” என்ற செய்திகள் வருவதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல!

இதே தனிநபர்கள், நிறுவனங்கள் பேரிடருக்கு முன்னர் முறையாகத் தவணைத் தொகைகளைத் திருப்பிச் செலுத்தி வந்ததை ஏனோ ரிசர்வ் வங்கியும், மற்ற வங்கிகளும் மறந்து விட்டு, “கால அவகாசம் நீட்டிக்கக் கூடாது” என்ற பிரசாரத்தைத் துவங்கியிருப்பது வாடிக்கையாளர் விரோத மனப்பான்மையின் உச்சக்கட்டமாகத் தெரிகிறது. ‘வாடிக்கையாளருக்கு முதல் சேவை’ என்ற இலக்கணத்திற்கும் விரோதமானது; வேலை இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடப்போரின் வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சும் செயல்.

கொரோனா பேரிடரின் கொடிய பிடியில் சிக்கியுள்ள மக்களையும்-சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களையும் மீட்டு பொருளாதார ரீதியாக-தொழில் ரீதியாக முன்னேற்றி-வளர்ச்சி நீரோட்டத்தில் தக்க விதத்தில் இணைத்திட வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய பாஜக அரசுக்கு இருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறும் ‘கடவுளின் செயல்’ என்ற கோட்பாடு மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகைக்கு நிச்சயம் பொருந்தாது; ஆனால் கடன் வாங்கி, வருமான இழப்பிற்கு உள்ளான மக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் மிகச் சரியாகப் பொருந்தக்கூடும் என்பதை ரிசர்வ் வங்கி இந்த நேரத்தில் உணர வேண்டும்.

ஆகவே கொரோனா கால ஊரடங்கு என்ற ஒரு கண்ணோட்டத்துடன் மட்டும் இதைப் பார்க்காமல்; ஊரடங்கையும் தாண்டி ஒவ்வொருவரின் கைகளில் இருக்க வேண்டிய ‘ரொக்கப் பணம்’ அல்லது ‘வருமானம்’ என்ற நிதி ஆதாரத்தின் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நிற்கிறது என்பதை உள்மனதில் வாங்கிக் கொண்டு, கடன் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த ஏற்கனவே ஆகஸ்ட் 31ம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திட வேண்டும் என்றும்; அப்படி நீட்டிக்கப்பட்ட காலங்களுக்கு உரிய வட்டித் தொகை-அபராத வட்டி போன்றவற்றை வசூலிக்காமல், ஏழை-எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டிட முன்வர வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸையும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வருமானம் என்ற நிதி ஆதாரத்தின் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நிற்கிறது என்பதை உள்மனதில் வாங்கிக் கொண்டு கால அவகாசத்தை நீட்டித்திட வேண்டும்.

Tags : EMI ,MK Stalin ,government ,Reserve Bank ,Reserve Bank of India , RBI, Central Government, MK Stalin urge to postpone EMI for 6 months
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...