சென்னை: போலீஸ் போல் நடித்து முட்டை வியாபாரியிடம் ரூ.2.25 லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை ஐஸ்அவுஸ் ஜாகிர் உசேன் முதல் தெருவை சேர்ந்தவர் முகமது வாசிம் (32). அதே பகுதியில் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த 28ம் தேதி வியாபாரம் சம்பந்தமாக ரூ.2.25 லட்சத்தை எடுத்துக்கொண்டு மந்தவெளி சிருங்கேரி மடம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காவலர் உடையில் நின்று கொண்டிருந்த 2 பேர், இவரை வழிமறித்து சோதனையிட்டனர். அதில், முகமது வாசிமிடம் ரூ.2.25 லட்சம் இருப்பது தெரிந்தது. இதுபற்றி அவரிடம் விசாரித்தபோது, தனது சொந்த பணம் என்று கூறினார்.
ஆனால், அதை ஏற்காத அவர்கள், அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், பணத்திற்கான முறையான ஆவணங்களை அபிராமபுரம் காவல் நிலையத்தில் காண்பித்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள், என்று கூறிவிட்டு காரில் புறப்பட்டு சென்று விட்டனர். இதையடுத்து, முகமது வாசிம் பணத்திற்கான ஆவணங்களுடன் நேற்று முன்தினம் அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்த போலீசாரிடம் விவரத்தை கூறினார். அப்போது, அங்கிருந்த போலீசார், நாங்கள் யாரும் வாகன சோதனை நடத்தவில்லை, பணத்தையும் பறிமுதல் செய்யவில்லை, என்று கூறினர்.
இதையடுத்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மேற்கண்ட பகுதியில் மர்ம நபர்கள் யாரும் பணம் பறிக்கவில்லை, என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அந்த பணம் தனது மாமனார் கொடுத்தது என்று முகமது வாசிம் கூறினார். இதையடுத்து போலீசார், சம்பவம் நடந்த அன்று ஏன் புகார் அளிக்கவில்லை. ஒரு நாள் கழித்து புகார் அளிக்க காரணம் என்ன என்பது குறித்து முகமது வாசிமிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர்.