ஊட்டி: ஊட்டியில் இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில், தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு மேல் மேற்கொள்ள தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது. நீலகிரியில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் துவங்கி அக்டோபர் மாதம் வரை இரண்டாவது சீசன் கடை பிடிக்கப்படுகிறது. இதற்காக, ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் கோத்தகிரி நேரு பூங்கா போன்ற பூங்காக்களில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மழை மற்றும் வெயில் என காலநிலை மாறுபட்டு காணப்பட்டதால், பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளில் 90 சதவீத செடிகளில் தற்போது மொட்டுக்களே காணப்படுகின்றன. எனவே, அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்த பின்னர் அலங்காரங்கள் செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஓரிரு நாட்களில் பூங்காவில் உள்ள மலர் செடிகளில் ஓரளவு மலர்கள் பூத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு மேல் மலர் அலங்காரங்கள் மேற்கொள்ள பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கொாரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சுற்றுலா பயணிகள் வர தடையுள்ளது. இதனால், முதல் சீசனின் போது பூங்காக்கள் தயார் செய்யப்பட்ட போதிலும், அதனை யாரும் பார்த்து ரசிக்க முடியாமல் போனது. இருந்த போதிலும், இரண்டாம் சீசனுக்காக வழக்கம் போல், அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்படுமா என்பது அரசே முடிவு செய்யும் என்பதால் உள்ளூர் வியாபாரிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.