மண்ணச்சநல்லூர் : ஸ்ரீ ரங்கம் பூ மார்க்கெட்டில் ஓசூரில் இருந்து கொண்டு வரப்படும் மேரிகோல்டு பூக்கள் ஒரு கிலோ ரூ.20க்கு விலைபோவதால் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
ஓசூரில் இருந்து மேரி கோல்ட் பூக்கள் ஸ்ரீ ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 500 முதல் ஆயிரம் கிலோ வருவது வழக்கம். ரங்கம் பூ மார்க்கெட் கொரோனா காரணமாக ரங்கம் அரசு பள்ளியில் இயங்கி வருகிறது. சாதாரணமாக முகூர்த்த நாட்களில் மேரிகோல்டு வகை பூக்கள் கிலோ 100 முதல் 160 வரை விற்பனையாகும்.
ஆனால் ஞாயிறு, திங்கட்கிழமையில் ஆவணி மாதம் வளர்பிறை கடைசி முகூர்த்தம் என்பதால் அதிக திருமணங்கள் நடைபெறுகின்றன. இருந்தபோதிலும் நேற்று ஒரு நாள் மட்டும் கடை இருப்பதால் மேரி கோல்ட் பூக்கள் கிலோ 20 முதல் முப்பது ரூபாய்க்கு மேல் வியாபாரம் ஆகவில்லை. இதனால் வியாபாரிகளும் விவசாயிகளும் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து ஸ்ரீ ரங்கம் பூ மார்க்கெட் வியாபாரி கோவிந்தசாமி (45) கூறியது: முகூர்த்த நாளில் மல்லிகைப்பூ ஒரு கை 500 முதல் 1000 வரை வியாபாரம் போகும்.
பொதுவாகவே முகூர்த்த நாளில் அனைத்து பூக்களின் விலை அதிகமாக இருக்கும், விற்பனையும் படுஜோராக காணப்படும், ஆனால் தற்பொழுது பொது ஊரடங்கால் வெளியிலிருந்து வரும் பூக்களும் குறைவாக வருகின்றன. அவ்வாறு வரும் பூக்களும் நியாயமான விலைக்கு நிற்கமுடியாமல் பூக்கள் தேங்கி விடுகின்றன. இதனால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதோடு விவசாயிகளுக்கும், பூக்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை என அவர் தெரிவித்தார்.