×

நாகையில் காதலித்து ஏமாற்றிவிட்டதாக எஸ்.ஐ. மீது இளம் பெண் புகார் : உயர்நீதிமன்ற உத்தரவால் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!!!

நாகை:  இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றி கர்பமாக்கிவிட்டு, கருவையும் கலைக்கவைத்ததாக எழுந்த புகாரில் 17 மாதங்களுக்கு பிறகு உயர்நீதிமன்ற தலையீட்டால் நாகை உதவி ஆய்வாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  நாகை மாவட்டம் வலிவலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக விவேக் ரவிராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார்.

 ஓரடி அம்பலத்தை சேர்ந்த இவர் மீது காதலித்து ஏமாற்றியதாக மணல்மேடு பகுதியில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது முகநூல் மூலம் ஏற்பட்ட தொடர்பு மற்றும் அதன் நெருக்கத்தால், இந்த பெண் திருமணத்திற்கு முன்பே கர்பமடைந்துள்ளார். ஆனால், விவேக் ரவிராஜ் மற்றும் அவரது தாயார் ராஜாத்தி ஆகியோர் இளம்பெண்ணின் கருவை கலைத்ததாக புகார் கூறப்படுகிறது.

 இதற்கிடையில் இதுதொடர்பாக இளம்பெணிற்கும், விவேக் ரவிராஜுக்கும் இடையே நடந்த செல்போன் உரையாடல், சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு பலமுறை வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதனை சிறிதும் பொருட்படுத்தாத விவேக் ரவிராஜ் தன்னை வெறுத்து ஒதுக்கியுள்ளதாக அந்த பெண் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார்.

 இதனையடுத்து அந்த பெண் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார். அதனைத்தொடர்ந்து, 17 மாதங்களுக்கு பிறகு உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் மீது மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் தனக்கு அதிகளவில் கொலை மிரட்டல் வருவதாகவும் அந்த பெண் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, விவேக் ரவிராஜ் மீது ஏமாற்றுதல், ஆபாசமாக திட்டுதல், கொலைமிரட்டல் உள்ளிட்டவற்றிற்காக 417, 420, 294பி, 312, 506 உட்பிரிவு 12 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவரது தாயார் மீதும், 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : SI ,Naga ,nagapatinam ,High Court , nagapatinam,Girl ,SI
× RELATED போதையில் நண்பர்களுடன் எஸ்ஐயை தாக்கிய விஏஓ