சென்னை: இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்றது. தமிழகத்தில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், சனிக்கிழமைகளிலேயே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்கின்றனர். இந்தநிலையில், முழு ஊரடங்கை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. இதனால், குடிமகன்கள் தங்களுக்கு தேவையான மதுவகைகளை நேற்றே வாங்கி இருப்பு வைத்துக்கொண்டனர். மதுரை, திருச்சி, சென்னை ஆகிய மண்டலங்களில் நேற்று வழக்கத்தை விட குடிமகன்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பெட்டி, பெட்டியாக மதுவகைகளை குடிமகன்கள் வாங்கிச்சென்றனர். போலீசாரும், ஊழியர்களும் குடிமகன்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் வழங்கப்பட்டது. 2 மீட்டர் இடைவெளி விட்டே மதுவாங்க அறிவுறுத்தப்பட்டனர். மேலும், நேற்று முன்பு எப்போதும் இல்லாத வகையில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரித்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர். சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பாக ரூ.180 கோடி வரையில் தான் மதுவிற்பனை நடைபெற்றது. ஆனால், கடந்த 18ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட பிறகு ரூ.250 கோடி வரையில் விற்பனை நடைபெறுகிறது. இதனால், நேற்று ரூ.270 கோடி வரையில் மதுவிற்பனை நடைபெற்றிருக்கலாம் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.