கொல்கத்தா: வலியே இல்லாமல் மருந்தை செலுத்தும் ஊசியை ஐஐடி காரக்பூர் பல்கலைக் கழகம் வடிவமைத்துள்ளது. குழந்தைகள் முதல் வில்லாதி வில்லன்க, ஜாம்பவான்கள் வரை பயப்படும் ஒரு விஷயம் ஊசி. எவ்வளவு பெரிய தைரியசாலியும், டாக்டர் ஊசியை எடுத்ததுமே சிறிது அச்சப்படுவார். இனிமேல், இதுபோன்ற பயமே தேவையில்லை. காரணம், குத்தினாலும் வலிக்காத அளவுக்கு மிகவும் நுண்ணிய ஊசியை ஐஐடி காரக்பூர் பல்கலைக் கழகம் வடிவமைத்து உள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் ஐஇஇஇ மற்றும் நேச்சர் ஜர்னல் இதழ்களில் கட்டுரையாகவும் வெளியிடப்பட்டு உள்ளது.
இது பற்றி பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான தருண் காந்தி பட்டாச்சார்யா கூறுகையில், ‘‘எங்கள் பல்கலைக் கழகத்தின் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவர்கள் இந்த நுண்ணிய ஊசியை வடிவமைத்து இருக்கின்றனர். மிகவும் சிறிதாகவும், மெலிதாகவும் இருக்கும் வகையில் ஊசியின் சுற்றளவு குறைக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் நோயாளியின் உடலுக்குள் உடைந்து விடாத வகையிலும் வலிமையாக தயாரிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக மருத்துவ நெறிகளுக்குட்பட்டு விலங்குகளிடம் இந்த ஊசியை குத்தி பரிசோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. இந்த ஊசியின் மூலம் மருந்தை செலுத்தும்போது வலியே இருக்காது. காப்புரிமை பெறவும் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது,’’ என்றார்.
சிறப்பு அம்சங்கள்
* கிளாசி கார்பன் தொழில்நுட்பத்தில் இந்த ஊசி உருவாக்கப்பட்டுள்ளது.
* அயர்னிக் பாலிமர் மெட்டல் காம்போசிட்டை அடிப்படையாகக் கொண்ட இதன் மைக்ரோபம்ப், மருந்தினை துல்லியமாகவும் சீராகவும் உடலுக்குள் செலுத்தும்.
* கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இந்த ஊசியின் பயன்பாடு மிகுந்த முக்கியத்துவம் பெறலாம்.