புதுடெல்லி: ‘இந்தியாவுக்குள் படையெடுத்த வெட்டுக்கிளிகள், நவீன தொழில்நுட்பங்களின் உதவியால் கட்டுப்படுத்தப்பட்டது,’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சியில் அமைந்துள்ள லட்சுமி பாய் வேளாண்மைக் கல்லூரியின் விழாவில் காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: உத்தரப் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் கட்டமைப்புக்கு ராணி லட்சுமிபாய் கல்லூரி மாணவர்கள் பெரும்பங்கு ஆற்றி வருகின்றனர். வேளாண்மையில் விஞ்ஞானத்தைப் புகுத்தும் வண்ணம் புதிய ஆராய்ச்சிகளை மாணவர்கள் இன்னும் மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா நோய்ப்பரவலுக்கு இடையே வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் 10 மாநிலங்கள் பாதிக்கப்பட்டன. அந்த பிரச்னையை நவீன தொழில்நுட்பங்கள் மூலமே இந்தியா கட்டுப்படுத்தியுள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்த எதிர்பாராத சூழலில், அறிவியல் ரீதியான அணுகுமுறை நமக்கு கைகொடுத்தது. டிரோன்கள், மருந்து தெளிக்கும் இயந்திரங்கள், ஹெலிகாப்டர்களும் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பல நவீன உபகரணங்களை அளித்து மத்திய அரசு உதவியது.
இந்த விஞ்ஞான நடவடிக்கைகளின் மூலம் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கர், அரியானா, உத்தரகாண்ட், பீகார் ஆகிய 10 மாநிலங்களிலும் 5.66 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களை (சுமார் 18 லட்சம் ஏக்கர்) வெட்டுக்கிளிகளிடம் இருந்து பாதுகாத்துள்ளோம். எனவே, வேளாண்மைத் துறையில் நம் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்துவதோடு நின்று விடக் கூடாது. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதையும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.