திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 40 நாட்களுக்கு பிறகு முன்னறிவிப்பின்றி பக்தர்கள் நேற்று முதல் இலவச தரிசனத்தில் சுவாமியை வழிபட இலவச டிக்கெட் வழங்கப்பட்டது. கொரோனா பரவலை தடுப்பதற்காக, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, மத்திய அரசு ஊரடங்கு தளர்வு செய்ததால்,கடந்த ஜூன் 11ம் தேதி முதல் ரூ.300 கட்டண சிறப்பு தரிசன டிக்கெட், தினமும் 3 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால், கோயில் ஊழியர்கள், அர்ச் சகர்களை கொரோனா தாக்கியதால், ஜூலை 20ம் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில் வரும் 1ம்தேதி முதல் மீணடும் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், நேற்று காலை திடீரென பூதேவி காம்ப்ளக்சில் 10 கவுன்டர்கள் அமைக்கப்பட்டு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. முன்னறிவிப்பு எதுவும் இன்றி திறக்கப்பட்டதாலும், இது பற்றி மக்களுக்கு தெரியாததாலும், கவுன்டர்கள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இருப்பினும், இன்று முதல் பக்தர்கள் குவிவார்கள்என எதிர்பார்க்கப்படுகிறது.