×

வேளாங்கண்ணி ஆரோக்கியமாத பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகை: வேளாங்கண்ணி ஆரோக்கியமாத பேராலயத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.

பக்தர்கள் வருகையை தடுக்க மாவட்ட எல்லைகளில் 21 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. செப்டம்பர் 8 வரை நடக்கும் விழாவை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அன்புரோஸ் கொடியேற்றி தொடங்கி வைத்தார். கொரோனா ஊரடங்கால் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் வீட்டில் இருந்து திருவிழா நிகழ்ச்சிகளை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த பேராலயத்துக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் விளங்கும் இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை நடக்கிறது. 7-ந் தேதி அன்னையின் பெரிய தேர் பவனி நடக்கிறது. 8-ந் தேதி அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக தேவாலயத்தில் பக்தர்கள் கூட்டம் கூடி பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.



Tags : Velankanni Health Month Cathedral Festival ,Festival ,Velankanni , Velankanni, Festival
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...