ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நாகனம்பட்டி புறவழிச்சாலை கே.கே.நகரில் ராமசாமி சித்தர் கோயில் மற்றும் சாய்பாபா கோயில் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயர் கோபுர மின்விளக்கு (ஹைமாஸ்) அமைக்கப்பட்டது. இவ்வழி கே.கே.நகர், கொல்லபட்டி, சங்குபிள்ளைபுதூர் மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளுக்கு செல்லவும், செக்போஸ்டிலிருந்து தாராபுரம் சாலையை அடைவதற்கும் முக்கியமானதாக உள்ளது. கிராம பகுதிகளில் விளைவித்த காய்கறிகளை மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லவும், ராமசாமி சித்தர் கோயிலிருந்து ஒட்டன்சத்திரம் நகருக்குள் வருவதற்கும் இச்சாலையின் வழியாக தான் மக்கள் வரவேண்டும்.
இதனால் மூன்று ரோடு பிரிந்து செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இங்கு அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு சில மாதங்கள் மட்டும் தான் எரிந்தது. ஆனால், அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இரவு நேரங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள் எதிரே வருபவர்கள் தெரியாமல் விபத்தில் சிக்கி வருகின்றனர். இப்பகுதியில் கோயில்களில் அதிகம் இருப்பததால் வெள்ளி மற்றும் சனிக்கிழமை நாட்களில் பெண்கள் அதிகம் வருகின்றனர். அப்போது இருட்டைப் பயன்படுத்தி திருட்டு மட்டும் வழிப்பறி அதிகளவில் நடைபெறுகிறது. எனவே, இந்த ஹைமாஸ் விளக்கை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.