* பொதுமக்கள் அவதி * சீரமைக்க கோரிக்கை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை பஸ் மற்றும் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு அருகில் அமைந்துள்ளது தியாகி அண்ணாமலை நகர். இந்த நகரையொட்டி தாலுகா அலுவலகம், கிழக்கு காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளது.இந்நிலையில், இங்கு சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி என எவ்வித அடிப்படை கட்டமைப்பு வசதியுமில்லை. குறிப்பாக, குடியிருப்பு பகுதியையொட்டி ராட்சத அளவில் அமைந்துள்ள திறந்தவெளி கழிவுநீர் கால்வாயில், ஆண்டுக்கணக்கில் கழிவுநீர் அகற்றப்படாமல் தேங்கியுள்ளது.
தற்போது, ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால், அந்த கால்வாயிலிருந்து கழிவுநீர் வெளியேறும் வழி அடைப்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் கால்வாய் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி, அங்கு வசிக்கும் மக்களுக்கு உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது. கொரோனாவால் மக்கள் அஞ்சி வாழும் நிலையில், குடியிருப்பு பகுதியை சுற்றிலும் சுகாதார சீர்கேடு நிறைந்திருப்பதால் அப்பகுதிமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தேங்கியிருக்கும் கழிவுநீர் வெளியேற வடிகால் வசதியை ஏற்படுத்தி, அப்பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.