காளையார்கோவில்: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட குருந்தணி கிராமத்தில் இருந்து நற்புதம் கிராமத்திற்கு செல்வதற்கு முன் உள்ள வளைவில் அபாயகரமான கிணறு ஒன்று இருக்கிறது. கிணற்றில் உள்ள தண்ணீரை குறுந்தணி மற்றும் நற்புதம் கிராமமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை வழியாக பள்ளிக்குழந்தைகள், பொதுமக்கள் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிகளவில் செல்கின்றனர்.
வளைவில் சாலை ஓரமாக கிணறு உள்ளதால் வாகனங்கள் நிலை தடுமாறி உள்ளே விழும் அபாயம் உள்ளது. இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறுந்தணி-நற்புதம் கிராமங்களுக்கு இடையே உள்ள சாலை ஓரத்தில் திறந்த நிலையில் உள்ள கிணறு.