வேலூர்: வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து கைவரிசை காட்டிய கும்பலை பிடிக்க சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.வேலூர் சேண்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான இந்த ேகாயிலில் சதுர்த்தி உள்ளிட்ட விசேஷ தினங்களில் குழந்தை வரம், திருமணம் ஆகியவற்றை வேண்டி ஏராளமானோர் வந்து சுவாமியை தரிசனம் செய்து செல்வார்கள். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கோயில் பூட்டப்பட்டிருக்கிறது. ஆனால், பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் வழக்கமான பூஜைகள் மட்டும் நடக்கிறது.இந்நிலையில் கடந்த 26ம் தேதி மாலை பூஜை செய்வதற்காக கோயிலுக்கு சென்ற அர்ச்சகர், அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து இந்து அறநிலைய துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் வடக்கு போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். உண்டியலில் இருந்து எவ்வளவு பணம் திருட்டு போனது என்பது தெரியவில்லை.
ஆனால் ‘கோயில் பல நாட்களாக பூட்டியிருக்கும் நிலையில், உண்டியலில் அதிகளவு காணிக்கை பணம் இருக்க வாய்ப்பில்லை’ என்று கூறி கோயில் நிர்வாகத்தினர் புகார் கொடுக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் உடைந்திருந்த சிறிய கேட், உண்டியல் ஆகியன வெல்டிங் வைத்து சரிசெய்யப்பட்டது.ஆனாலும் திருட்டு கும்பல் வேலூர் மாவட்டத்தில் வேறு இடங்களில் கைவரிசை காட்ட வாய்ப்புள்ளதால், வடக்கு போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதில் 4 பேர் கொண்ட திருட்டு கும்பல் அடையாளங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.