சென்னை: தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த மதுரை-மேலூரை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் பாலச்சந்தர், பாலகுமார் ஆகியோரை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மேலுாரில் இரட்டையர்கள் பாலகுமார், பாலசந்தர் 17, தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இவர்கள் அரசு இருபாலர் பள்ளியில் பிளஸ் 2 படிக்கின்றனர். சிறு வயதில் விபத்தில் காயமுற்ற தந்தை, ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் இறந்தார். இதன் காரணமாகவே தானியங்கி சிக்னலை கண்டுபிடித்தோம் என்றனர்.
அவர்கள் கூறியதாவது: உயிருக்கு போராடுபவர்களை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் புறப்பட்டதும் 2 கி.மீ., துாரம் முன்பு அதில் உள்ள ஜி.பி.எஸ்., கருவி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்.எம்.எஸ்., வந்துவிடும். இதைதொடர்ந்து சர்க்யூட் போர்டு தானாக இயங்க ஆரம்பித்து ரோட்டோர மின் விளக்கில் கட்டப்பட்டுள்ள ஒலிபெருக்கியில் ஆம்புலன்ஸ் வருகிறது. வழிவிடுங்கள் என்று தெரிவிப்பதோடு ஊதா நிறத்தில் விளக்கு ஒளிரும். ஆம்புலன்ஸ் கடந்ததும் மீண்டும் எஸ்.எம்.எஸ்., கட்டுப்பாட்டு அறைக்கு சென்று ஒளிபரப்பு துண்டிக்கப்படும் என்றனர்.
இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சகோதரர்களை பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மதுரை-மேலூரை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் பாலச்சந்தர், பாலகுமார் ஆகியோர் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி விரைந்துவர தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது பாராட்டிற்குரியது.சகோதரர்கள் இருவரது உன்னத கண்டுபிடிப்புகள் தொடர எனது நல்வாழ்த்துகள்! எனத் தெரிவித்துள்ளார்.