புதுடெல்லி: குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரணாப் முகர்ஜி மருத்துவ பரிசோதனைக்காக சென்ற போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, முகர்ஜி ஆகஸ்ட் 10ம் தேதி இராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்கனவே வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, இராணுவத்தின் ஆர் அண்ட் டி மருத்துவமனையில் மூளையில் காணப்பட்ட ரத்த உறையை அகற்ற அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னர் அவருக்கு நுரையீரல் தொற்று, சிறுநீரக செயலிழப்பு ஆகியவையும் ஏற்பட்டு அதற்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர் கோமா நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று அவரது உடல்நிலை குறித்து டெல்லி ஆர்மி ரிசர்ச் அன்ட் ரெஃபரல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பிரணாப் முகர்ஜிக்கு ஏற்பட்டுள்ள நுரையீரல் தொற்றுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது சிறுநீரக செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் ஆழ்நிலை கோமாவில் உள்ளார். வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகியளிக்கப்பட்டு வருகிறது. மற்ற உறுப்புகள் இயல்பாக செயல்படுகின்றன, என்று கூறப்பட்டுள்ளது.