×

மத்திய பிரதேசத்தில் பாஜ அரசு கஞ்சத்தனம்: ஒரு பசுவுக்கு ஒரு நாளைக்கு பராமரிப்பு செலவு 160 பைசா: காங்கிரஸ் ஒதுக்கிய ரூ.132 கோடி, ரூ.11 கோடியாக குறைப்பு

போபால்: மத்தியப் பிரதேசத்தில் கோசாலைகளில் உள்ள 1.80 லட்சம் பசுக்களுக்கு, ஒரு பசுக்கு  ஒரு நாளைக்கு ரூ.160 காசுகளை பராமரிப்பு செலவுக்காக பாஜ அரசு ஒதுக்கியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில்  1,300 கோசாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1.80 லட்சம் பசுக்கள்  பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு இம்மாநிலத்தில் ஆட்சி செய்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, தனது பட்ஜெட்டில் கால்நடை பராமரிப்பு  துறைக்காக ரூ.132 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் மூலம், மாநிலம் முழுவதும் கோசாலைகளில் இருக்கும் பசுக்களுக்கு தாராளமாக நிதி வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த மே மாதம் கமல்நாத் அரசு கவிழ்க்கப்பட்டு, சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜ அரசு பொறுப்பேற்றது. இந்த அரசு, 2020-2021வது நிதியாண்டில் கால்நடை பராமரிப்புக்காக ரூ.11 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 90 சதவீதம் குறைவாகும். இந்த நிதியின் மூலமாக மாநிலம் முழுவதும் உள்ள  1,300 கோசாலைகளை பராமரிக்க வேண்டும். அவற்றில் உள்ள 1.8 லட்சம் பசுக்களுக்கு தீவனம் வாங்க  வேண்டும், பயோ-கேஸ் ஆலைகளையும் பராமரிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இது  தொடர்பாக கோசாலை நடத்தி வரும் ராகேஷ் மால்வியா கூறுகையில், “ஒரு  பசுவுக்கு ஒரு நாளைக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை தீவனங்களுக்காக செலவு  செய்கிறோம். அரசு இப்போது ஒதுக்கியுள்ள நிதியின்படி பார்த்தால், ஒரு பசுவின் பராமரிப்புக்கு ஒருநாளைக்கு 1.60 காசுகள் மட்டுமே கிடைக்கிறது,” என்றார் வேதனையுடன்.ம்மாநில கால்நடை  துறை அமைச்சர் பிரேம் படேல் கூறுகையில், “பசுக்கள் பராமரிப்புக்கு  கூடுதல் நிதி  ஒதுக்கீடு செய்யும்படி நிதியமைச்சர் ஜக்தீஷ் தேவ்டாவை  கேட்டுக் கொண்டுள்ளேன். நாங்கள் பசுக்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம்,”  என்றார்.

Tags : BJP ,Madhya Pradesh ,government ,Congress , Madhya Pradesh, BJP government, austerity
× RELATED ம.பி.யில் நள்ளிரவில் காவல்நிலையத்தில்...