டெல்லி: குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் நீடிப்பதாக ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட பிரணாப்புக்கு வெண்டிலேட்டர் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், அவரது இரத்த ஓட்டம், இதயம் மற்றும் பல்ஸ் ரேட் ஆகியவை இயல்பாக இருப்பதாக கூறுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரணாப் முகர்ஜி மருத்துவ பரிசோதனைக்காக சென்ற போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, முகர்ஜி ஆகஸ்ட் 10ம் தேதி இராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்கனவே வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, இராணுவத்தின் ஆர் அண்ட் டி மருத்துவமனையில் மூளையில் காணப்பட்ட ரத்த உறையை அகற்ற அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னர் அவருக்கு நுரையீரல் தொற்று, சிறுநீரக செயலிழப்பு ஆகியவையும் ஏற்பட்டு அதற்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர் கோமா நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை, அவர் நினைவிழந்து ஆழ்ந்த கோமா நிலையில் நீடிப்பதாக ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட பிரணாப்புக்கு வெண்டிலேட்டர் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.