×

நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர் வழியாக செல்லும் நெடுஞ்சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால், விபத்து ஏற்படும் அபாயம்  அதிகரித்துள்ளது.  பொள்ளாச்சி நகரில் கடைவீதி, போலீஸ் ஸ்டேஷன் ரோடு, தெப்பக்குளம் வீதி, ராஜாமில் ரோடு, நியுஸ்கீம் ரோடு, தேர்நிலை உள்ளிட்ட பகுதிகளில்  விதிமீறி கனரக வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன. அங்கு அவ்வப்போது பகல் நேரத்தில் கனரக வாகனங்களை நிறுத்தி சரக்கு பொருட்களை  இறக்குவதால் இடையூறு ஏற்படுகிறது.மேலும்,  நகர் பகுதியிலிருந்து பிரிந்து செல்லும் முக்கிய ரோடுகளான கோவை ரோடு, உடுமலை ரோடு,  பாலக்காடு ரோடுகளில்  ஆங்காங்கே தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி செல்வதால், ரோட்டில் செல்லும் பிற வாகனங்கள் விரைந்து செல்ல  முடியாமல் உள்ளது. இதில் போலீஸ் ஸ்டேஷன் ரோடு பிரிவிலிருந்து மரப்பேட்டை பாலம் வரையிலும், போக்குவரத்துக்கு இடையூறாக ஆங்காங்கே  நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அரசு மருத்துவமனை முன்பாக செல்லும் உடுமலை ரோட்டில் நேற்று வாகன போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருந்தது.  அதுபோல், காந்தி சிலையிலிருந்து சிடிசி மேடு வரையிலும் கோவை ரோட்டில் ஆங்காங்கே கனரக வாகனங்களை நிறுத்தி சென்றனர். பொதுமக்கள்  கூறுகையில், ‘போக்குவரத்து  மிகுந்த நெடுஞ்சாலைகளில்  வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் மக்கள் அவதிப்படுவது மட்டுமின்றி, சில  நேரங்களில் விபத்து நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், அந்த வழியாக வரும் வாகனங்கள் நகர முடியாத நிலை  ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் ரோட்டை மறித்தவாறு வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்க  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் ரோட்டை மறித்தவாறு  வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

Tags : highway , Parked ,along ,highway,vehicles
× RELATED கலவை- வாழைப்பந்தல் நெடுஞ்சாலையில் மரங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பு