நாமக்கல்: நாமக்கல் அருகே உள்ள கருப்பட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரவிச்சந்திரன் (52). இவருக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில், மக்காச்சோளம், ஆமணக்கு பயிரிட்டுள்ளார். மேலும், சப்போட்டா மரங்களை வளர்த்து வருகிறார். இவரது பூர்வீக சொத்தான இந்த நிலத்தின் ஒரு பகுதியில், வரப்பு அமைப்பதற்காக நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் நிலத்தை தோண்டியுள்ளார். அப்போது, ஒரு குறிப்பிட்ட பகுதியில் புதைகுழி போல தென்பட்டது. இதையடுத்து அந்த இடத்தை மட்டும் 7 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்டது. அப்போது அங்கு புதையல் எதுவும் இல்லை. ஆனால் பழங்காலத்தில் மக்கள் பயன்படுத்தும் தானிய கிடங்கு போன்ற அமைப்பு தென்பட்டது. இதனிடையே, அந்த பகுதியில் புதையல் இருப்பதாக தகவல் பரவியதால், ரவிச்சந்திரன் நிலத்தை பார்க்க பொதுமக்கள் பலரும் கூடினர்.
ஆனால் அங்கு புதையல் எதுவும் இல்லை. இதையடுத்து அங்கு வந்த பலரும் தானிய கிடங்கிற்குள் இறங்கி போட்டோ எடுத்து, வாட்ஸ்அப்பில் பதிவேற்றம் செய்தனர்.
இதுகுறித்து விவசாயி ரவிச்சந்திரன் கூறுகையில், ‘இந்த நிலம் எங்கள் குடும்பத்தில் 150 ஆண்டுக்கு மேலாக இருக்கிறது. இதற்கு முன் பலமுறை இந்த இடத்தில் உழவு ஓட்டியுள்ளோம். அப்போதெல்லாம் தானிய கிடங்கு இருந்தது குறித்த அறிகுறியே தெரியவில்லை. தற்போது வரப்பு அமைப்பதற்காக சற்று ஆழமாக தோண்டியதால், தானிய கிடங்கு தென்பட்டுள்ளது. பழங்காலத்தில் தற்போது போல வசதியான வீடுகள், தனி அறைகள் கிடையாது. எங்கள் மூதையார்கள் குடிசை வீடுகளில் தான் வசித்துள்ளனர். அப்போது விவசாயத்தின் மூலம் கிடைக்கும் தானியங்களை சேமித்து வைக்க, தானிய கிடங்கை ஏற்படுத்தியுள்ளனர். தானிய கிடங்கு அமைந்துள்ள இடத்தை தொடர்ந்து பராமரிக்க உள்ளேன்,’ என்றார்.