திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததாக புகார் எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் காட்டுநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பானுமதி என்பவரே பாதிக்கப்பட்டவராவார். 46 வயதான இவர் கடந்த ஜூன் மாதம் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக, பானுமதி விபத்தில் சிக்கினார். அப்போது வலது காலில் முறிவு ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் அவருக்கு இரும்பு லார்டு வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது. இதனையடுத்து வீடு திரும்பிய 3 மாதங்களிலேயே, பானுமதி காலில் பொருத்தப்பட்ட கம்பி உள்ளங்கால் வழியாக வெளியே வந்ததால், அதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பானுமதி நடமாட முடியாமல் தவித்து வருகிறார். இதனையடுத்து சொந்த வேலைக்குக்கூட மற்றவர்களை எதிர்பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பானுமதி கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார். இதனால் முறையான சிகிச்சையளிக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவரின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் இதுபோன்ற அரசு மருத்துவர்களின் அலட்சிய செயலுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.