×

விவசாயி அணைக்கரை முத்து வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக் கோரிய மனு: தமிழக அரசு பதில்தர நீதிமன்றம் உத்தரவு

மதுரை: அணைக்கரை முத்து வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக் கோரிய மனுவில் தமிழக அரசு பதில்தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72). விவசாயி. இவர் தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடையம் வனத்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது அணைக்கரை முத்துவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத முத்துவின் குடும்பத்தினர், வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் அவரை தாக்கியதால் தான் உயிரிழந்ததாக புகார் அளித்தனர்.

மேலும் பல்வேறு போராட்டங்களை நடத்தி அவரது உடலை வாங்க மறுத்தனர். இந்த நிலையில் இறந்த அணைக்கரை முத்துவின் மனைவி பாலம்மாள், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில் தனது கணவரின் உடலை மறுஉடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனது கணவரை கொலை செய்த வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். முன்னதாக, இந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதனடிப்படையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் மீண்டும் மறுஉடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

இதனையடுத்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி தடவியல் துறை செல்வமுருகன், தடவியல் துறை இணை பேராசிரியர் பிரசன்னா, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி தடவியல் துறை தலைவர் ஆகியோர் மறுஉடற்கூறு ஆய்வு செய்தனர். அம்பாசமுத்திரம் நடுவர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திக்கேயன் முன்னிலையில் மறுஉடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்‍கை சி.பி.சி.ஐ.டிக்‍கு மாற்றக்‍கோரி அணைக்‍கரை முத்துவின் மனைவி தாக்‍கல் செய்த மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், செப்டம்பர் 16ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.


Tags : Government of Tamil Nadu ,farmer embankment pearl case hearing , Farmer Dam Muthu, CPCID, Government of Tamil Nadu, High Court Branch
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...