மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வெகுவாக நீர் வரத்து குறைந்து வருவதால், நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ் உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வந்தன. இதன் காரணமாக தமிழகத்தின் காவிரி ஆற்றில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையும் வேகமாக நிரம்பி வந்தன.
இந்த நிலையில், தற்போது மழை இல்லாத காரணத்தினால் கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைந்துவிட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கணிசமாக குறைந்துவிட்டது. அதாவது நேற்று காலை வினாடிக்கு 6 ஆயிரத்து 204 கனஅடியாக இருந்த நீர் வரத்து, இன்று 4 ஆயிரத்து 665 கனஅடியாக சரிந்தது.
இதனையடுத்து அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதமும், கிழக்கு, மேற்கு பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரும் நீரைக்காட்டிலும் அதிகமான நீர் வெளியேற்றப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி குறைந்து 94.92 கனஅடியை எட்டியுள்ளது. இந்த நிலையில், அணையின் நீர் இருப்பு 58.45 டி.எம்.சியாக உள்ளது.