×

சேரன்மகாதேவியில் அரசு பணம் ரூ. பல கோடி வீண் முறையான திட்டமிடல் இன்றி துவங்கிய ரயில்வே சுரங்கப் பாதை பணி நிறுத்தம்: நிலங்களுக்கு செல்ல முடியாமல் ஓராண்டாக விவசாயிகள் பரிதவிப்பு

வீரவநல்லூர்: சேரன்மகாதேவியில் முறையான திட்டமிடுதல் இன்றி துவங்கப்பட்ட சுரங்க ரயில் பாதை திட்டம், ஓராண்டாக கிடப்பில்  போடப்பட்டதால் விளைநிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.சேரன்மகாதேவியில் ராமர் கோயில் பஸ் நிறுத்தத்தில் இருந்து வடக்கு நாலாந்தெரு, தெற்கு நாலாந்தெரு, அம்மநாதன் கோயில் தெரு போன்ற  பகுதிகளுக்கு செல்ல பேரூராட்சி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. இதில் தெற்கு நாலாந்தெரு  அருகே ரயில் தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்ல ஆளில்லா ரயில்வே கிராசிங் இருந்தது. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ரயில்வே கிராசிங்கின் கீழ்புறம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் உள்ளன.

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் ரயில்வே கிராசிங்கை அகற்றி நவீனப்படுத்த ரயில்வே துறை சார்பில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி  துவங்கப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்ட இந்த திட்டம் ஆரம்பத்தில் வேகமாக நடந்தது. இப்பணிக்கு இடையூறு ஏற்படாமல்  இருக்க பொதுமக்கள் கடந்து செல்ல கீழ்புறம் வயல்களுக்கு மத்தியில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது. அப்போது தண்டவாளம் பகுதியில் தற்காலிக  கேட் அமைத்து ரயில் வரும் நேரங்களில் பணியாளர்கள் மூலம் கேட் அடைத்து திறக்கப்பட்டது. முறையான திட்டமிடுதல் இன்றி துவங்கப்பட்ட இந்த சுரங்கப் பாதையில் 24 மணி நேரமும் தண்ணீர் ஊற்றெடுக்க தொடங்கியது. இதனால் எப்போதும்  5 அடி ஆழத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது. பல கோடி ரூபாய்க்கு பணிகள் நடந்தும் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க  பொறியாளர்கள் பல்வேறு வகையில் திட்டமிட்டும் தண்ணீர் தேங்குவதை நிறுத்த முடியவில்லை. இதையடுத்து ஒரு வருடத்திற்கு முன்னர் பணிகள்  நிறுத்தப்பட்டன.
பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் வயலுக்கு உழவு இயந்திரங்களை கொண்டு செல்லவும், உரம் மற்றும் பராமரிப்பு பணிகளை  மேற்கொள்ளவும் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

தற்போது கன்னடியன் கால்வாயில் திறக்கப்பட்டு விவசாயப் பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில் கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை  பணியால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி சுரங்கப்பாதையில் 10 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் தண்ணீர் நிறம் மாறி துர்நாற்றம் வீசுவதுடன்  கால்நடைகள் பாதிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. மாற்றுப்பாதைக்காக வயலில் புதிய பாதை அமைத்துள்ளதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாகள் பரிதவித்து வருகின்றனர். இதே நிலை  நீடித்தால் அறுவடை காலங்களில் விளைபொருட்களை கரை சேர்க்க விவசாயிகள் அதிக செலவு செய்ய வேண்டியதிருக்கும்.
எனவே சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் விரைந்து ஆய்வு செய்து மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை  எடுப்பதோடு, இவ்விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பதே விவசாயிகளின் வேண்டுகோளாகும்.

Tags : government ,Rs ,planning Strike ,land ,tunnel , Cheranmakhadevi, tunnel , unable, land
× RELATED டிவி விளம்பரங்களுக்கு ரூ.3,000 கோடி செலவு செய்த மோடி அரசு!