கீழக்கரை: கீழக்கரையில் மெயின் ரோட்டில் இருந்து தாலுகா அலுவலகம் செய்ய தார்ச்சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கீழக்கரையை தனி தாலுகாவாக தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது. கடந்த மார்ச் மாதத்தில் ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்ட வந்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கீழக்கரை தாலுகா அலுவலகத்தையும் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தாலுகா அலுவலகம் கீழக்கரையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தாலுகா அலுவலகம் அமைந்துள்ள பகுதி தென்னந் தோப்புகள் நிறைந்த பகுதிகளாக இருக்கிறது. மேலும் மெயின் ரோட்டில் இருந்து தாலுகா அலுவலகம் சில நூறு மீட்டர் தூரத்தில் உள்ளே அமைந்துள்ளது. மேலும் தாலுகா அலுவலகத்தில் நுழைவு வாயில் இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் பலரையும் குழப்பம் அடைய செய்கிறது. மேலும் தாலுகா அலுவலக பாதையானது செம்மண் சாலையாக இருப்பதால் மெயின் ரோட்டில் இருந்து பார்க்கும் போது பலருக்கும் தாலுகா அலுவலகம் இருப்பதே தெரிவதில்லை.
இதனால் புதிதாக வருபவர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதுடன் நேரமும் வீண் விரயம் ஆகிறது. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் எனவும், தாலுகா அலுவலகம் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதால் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மினி பஸ் இயக்க வேண்டும். புறநகர் பேருந்தில் வருபவர்கள் இறங்க புதிய பேருந்து நிலையம் அமைத்திடவும், விபத்துகள் ஏற்படாமல் இருக்க நுழைவு வாயில் அருகில் வேகத்தடையும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.