கெனோசா: கருப்பினத்தை சேர்ந்தவரை போலீசார் சுட்ட விவகாரம், அமெரிக்காவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. போலீசை கண்டித்து விஸ்கான்சின் மாகாணத்தில் நடந்த போராட்டத்தின் போது கலவரக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியாகினர். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள மினியோபோலிசில் கடந்த மே 25ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவரை போலீசார் கழுத்தில் மிதித்து கொன்றதால், அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த சம்பவம் நடந்து முழுவதுமாக மூன்று மாதங்கள் கூட முடியாத நிலையில், இதே போன்றதொரு சம்பவம் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள கெனோசா நகரில் 3 நாட்களுக்கு முன் அரங்கேறியது.
விஸ்கான்சின் மாகாணத்தின் கெனோசா நகரில் கடந்த ஞாயிறன்று, தனது மூத்த மகன்(8), பிறந்த நாளையொட்டி, தனது 3, 5 வயது மகன்களையும் அழைத்து கொண்டு கடைக்கு வந்த ஜேக்கப் பிளேக் என்ற கருப்பினத்தவரை போலீசார் முதுகில் 7 முறை சுட்டனர். இதில் அவரது தண்டுவடத்தில் குண்டு துளைத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை ரேஷான் ஒயிட் என்பவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசை கண்டித்தும், இனவெறிக்கு எதிராகவும் நடந்த போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது.
இந்நிலையில், கெனோசாவில் நேற்றைய போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதில் பல வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தன. போராட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தால், ஏற்கனவே பெரிதாகி கொண்டிருக்கும் பிளேக் விவகாரம், நாடு முழுவதும் பரவும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
* பிளேக்கால் நடக்க முடியுமா?
பிளேக்கின் வக்கீல் பென் கிரம்ப் கூறுகையில், ``தண்டுவடத்தில் சுடப்பட்டதால், முதுகெலும்புகள் சேதமடைந்துள்ளன. அவர் மீண்டும் எழுந்து நடக்க முடியுமா? என்று கூற முடியாது. துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது சிவில் வழக்கு தொடர உள்ளோம். விஸ்கான்சின் நீதித்துறை இது தொடர்பாக விசாரித்து வருகிறது,’’ என்றார்.
* போலீசால் ஓட்டுகளை இழக்கும் டிரம்ப்
அமெரிக்காவில் நவம்பரில் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், அதிபர் டிரம்ப்புக்கு போலீசால் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே, ஜார்ஜ் பிளாட் விவகாரத்தால், கருப்பின மக்களுக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டு, வாக்கு வங்கி சரிந்துள்ளது. தற்போது, பிளேக் விவகாரத்தால் மீண்டும் கருப்பின மக்கள் கொதித்து எழுந்துள்ளதால், இந்த இன மக்களிடம் டிரம்ப்புக்கு இருக்கும் கொஞ்சம் செல்வாக்கையும் இழக்கும் நிலை உருவாகி இருக்கிறது.