கொல்கத்தா: சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் நிலவி வருகின்றன. அவர் தைவானில் கடந்த 1945, ஆகஸ்ட் 18ம் தேதி நடந்த விமான விபத்தில் படுகாயமடைந்து இறந்ததாக ஜப்பான் அரசு கூறியது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ரென்கோஜி கோயிலில் நேதாஜியின் அஸ்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், நேதாஜி மரணம் தொடர்பான சந்தேகங்கள் இதுவரை தீராததால், அதை பற்றி விசாரிப்பதற்காக இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 10 விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டன.
அதில், 1999ல் அமைக்கப்பட்ட நீதிபதி மனோஜ் குமார் முகர்ஜி தலைமையிலான கமிஷன் அறிக்கையில் மட்டும், ‘தைவான் விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை, அவர் ரஷ்யா தப்பிச் சென்றார், ஆனால், அவர் உயிருடன் இல்லை,’ என சில ஆதாரங்களுடன் அறிக்கை அளித்தது. இதை மத்திய அரசும் ஏற்கவில்லை. இந்நிலையில், நேதாஜியின் குடும்பத்தினர்களான சூர்ய போஸ், மாதுரி போஸ், மத்திய அரசுக்கு எழுதியுள்ளக டித்தில் ‘முகர்ஜி கமிஷன் ஏதோ சில ஆதாரங்களை கொண்டு நேதாஜி தைவான் விமான விபத்தில் இறக்கவில்லை என்று கூறியுள்ளது. அதே நேரம்,. அவர் எங்கு எப்படி இறந்தார் என்பதை கூறவில்லை. இந்த அறிக்கை நம்பும்படியாக இல்லை,’ என கூறியுள்ளனர்.