சென்னை: அடையாறு ஆற்றின் குறிக்கே ஓ.டி.ஏ சார்பாக பாலம் கட்டியுள்ளதால் நீர்வழித்தடம் பாதிக்கப்பட்டுள்ளதா என்று நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறைக்கு தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மணப்பாக்கத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ் அதிகாரி ஸ்ரீதரன், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னையில் கூவம், அடையாறு ஆறு, ஓட்டேரி நல்லா மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவை 4 முக்கிய நீர் ஆதாரங்களாக உள்ளன. இதில் அடையாறு ஆறு மணிமங்கலத்தில் தொடங்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
கடந்த 2015 நவம்பர் மற்றும் டிசம்பரில் 85.4 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் திறந்து விடப்பட்டதில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏாராளமான தொழிற்சாலைகளின் ஆலை கழிவுகளும் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில், அடையாறு ஆற்றின் குறுக்கே ஓ.டி.ஏ சார்பாக ஐரீஷ் மற்றும் பெய்லி என்ற சட்டவிரோதமாக பாலம் கட்டப்பட்டதால் 100 மீ அகலமுள்ள ஆறு 40 மீட்டராக சுருங்கியதால் நீர்வழித்தடம் பாதிக்கப்பட்டு வெள்ள நீர் குடிசை பகுதிக்குள் வந்துள்ளது.
வெள்ளத்தின் காரணமாக உடைந்த பெய்லி பாலத்தின் கட்டுமான பொருட்களை அப்புறப்படுத்த ஓ.டி.ஏ நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், ஓ.டி.ஏ சார்பில் புதிய பாலங்கள் கட்டவும், உடைந்த பாலத்தின் பாகங்களை அகற்ற வேண்டும், நீர்வழித்தடத்தை தடை செய்யும் தூண்களை அகற்றவேண்டும், அபராதத்துடன் ஓ.டி.ஏ நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசார்த்த தீர்ப்பாய நீதிபதிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை வரும் செப்டம்பருக்கு ஒத்திவைத்தனர்.