பூந்தமல்லி: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை, பூந்தமல்லி அருகே தனியாருக்கு சொந்தமான காயலான் கடை உள்ளது. இங்கு பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் வயர்கள், அட்டைகள், பழைய பொருட்களை தரம் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலயில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் இந்த கடையின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. தீயானது கடை முழுவதும் பரவ ஆரம்பித்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் வெளியே வந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த பூந்தமல்லி, அம்பத்தூர் ஆகிய இரண்டு பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். புகை மூட்டத்தால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதில் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.