×

மானாமதுரை பகுதியில் கேன்களில் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை: அதிகாரிகள் கவனிப்பார்களா?

மானாமதுரை: மானாமதுரை முழுவதும் சுகதாரமற்ற குடிதண்ணீர் திறந்த கேன்களில் தாராளமாக விற்கப்படுகின்றன. நோய்தொற்றை ஏற்படுத்தும் குடிநீர் கேன்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் இந்தாண்டு கோடையை மிஞ்சும் அளவுக்கு சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படுவதால் தண்ணீர் தாகம் அதிகரித்து வருகிறது. தாகத்தை தணித்துக்கொள்ள நடுத்தர, ஏழைமக்கள் வாடகை வேன்களில் வரும் கேன்களை வாங்குகின்றனர். மானாமதுரையில் புது பஸ் ஸ்டாண்டு பின்புறம் ஆனந்தவல்லியம்மன் நகர், அண்ணாசிலை, காந்திசிலை, குண்டுராயர் வீதி, பைபாஸ் ரோடு, பழைய பஸ்ஸ்டாண்டு, சிவகங்கை மெயின்ரோடு, சிப்காட், சாஸ்தாநகர், மூங்கில்ஊரணி, மேலப்பசலை உள்ளிட்ட இடங்களில் சுகாதாரமற்ற மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேன்களில் குடிநீர் விற்பனை தாராளமாக நடக்கிறது.

இங்கு விற்கப்படும் குடிநீர் கேன்களில் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதிகள் இல்லை. புதுப்புது பெயர்களில் தயாரிக்கப்படும் இவற்றில் நிறுவனத்தின் முகவரியோ, தொலைபேசி எண்களோ இருப்பதில்லை. சாதாரண தண்ணீருடன் கலக்கப்பட்ட கலப்பட தண்ணீர்கேன்களில் வாங்கி பருகுபவர்களுக்கு குடல், இரைப்பையில் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் எளிதில் பரவும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு விற்கப்படும் குடிநீர் கேன்களை சுகாதாரத்துறையினரும் கண்டு கொள்வதில்லை. இது குறித்து தனியார் ரத்த பரிசோதனை நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘குடிசை தொழிலாக தயாரிக்கப்படும் குடிநீர் ஆலைகளில் இருந்து டேங்கர்களில் வரும் குடிநீர் சுத்திகரிக்கப்படாத நிலையில் கேன்களும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் கிருமிகள் சுத்தம் செய்யப்படாமல் தரமற்றதாக உள்ளன.

வீடுகள், பொதுநிகழ்ச்சிகளுக்காக பெரிய பிளாஸ்டிக் தொட்டிகளில் சேமித்து விற்கப்படும் தண்ணீரும் சுகாதாரமானதாக இல்லை. ரூ.30க்கு விற்கப்படும் இந்த கேன்கள் மிகவும் அசுத்தமாக இருக்கிறது. இந்த கேன்களை கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்வதில்லை. சுகாதாரமாக பராமரிக்காமல் மீண்டும் மீண்டும் இவற்றில் நீர் நிரப்பினால் இவற்றிலிருந்து நோய் தொற்று கிருமிகள் பரவும். பாக்டீரியா, வைரஸ் கிருமி பெரும்பாலும் காற்று மற்றும் குடிநீர் மூலம் எளிதில் பரவும். இதனால் சுகாதார அலுவலர்கள், உணவுபாதுகாப்பு அலுவலர்கள் இவ்வாறு விற்கப்படும் கேன்களை பரிசோதிக்க வேண்டும்,’’என்றார்.



Tags : area ,Manamadurai , Sale of unhygienic ,drinking water ,Manamadurai area,authorities, pay attention?
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...