ஏரல்: வல்லநாடு அருகே வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட பண்டாரவிளை போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை தூத்துக்குடி எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் நிதி வழங்கினார். வல்லநாடு அருகேயுள்ள மணக்கரை மலையடி வாரத்தில் வனத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் பதுங்கியிருந்த ரவுடி துரைமுத்து மற்றும் அவரது கூட்டாளிகளை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் டி.எஸ்.பி வெங்கடேசன் தலைமையில் தனிப்படையினர் கடந்த 18ம் தேதி சுற்றி வளைத்து பிடிக்க முயற்சி செய்த போது, அவர்களிடம் இருந்து தப்பிக்க ரவுடிகள் நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து போலீசார் மீது வீசினர். இதில் காவலர் சுப்பிரமணியன் தலையில் விழுந்து வெடிகுண்டு வெடித்ததில் தலைசிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடல் பண்டாரவிளை கிராமத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை தூத்துக்குடி எம் பி கனிமொழி, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் பண்டாரவிளையில் காவலர் சுப்பிரமணியன் மனைவி புவனேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் நிதி வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகப்பெருமாள், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தரராஜன், ஸ்ரீவை. ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு பிஜி ரவி, மேற்கு கொம்பையா, பெருங்குளம் நகர செயலாளர் சுடலை, ஒன்றிய பிரதிநிதிகள் கருணாநிதி, சேர்ந்திராஜா, இளைஞரணி முத்துக்குமார், முன்னாள் கவுன்சிலர் துரைச்செல்வம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்கிருஷ்ணன், விவசாய தொழிலாளர் அணி சின்னபாண்டி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.