நாமக்கல்: வீடுகளுக்கு ஆட்களை அனுப்பி கடன் வசூலிக்கும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்செங்கோடு அடுத்த கரிச்சங்காடு பகுதியில் விசைத்தறி தொழிலாளர் சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி மேனகா ஆகியோர் கந்துவட்டி கொடுமையால் கடந்த 20ம் தேதி விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டனர். இந்த நிலையில், ஆட்சியர் இவ்வாறு கூறியுள்ளார். அதாவது தனியார் நிதி நிறுவன உரிமையாளர்களை அழைத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், கடன் கொடுத்தவர்கள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பணத்தை வசூலிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அதனைவிடுத்து, வீடுகளுக்கு ஆட்களை அனுப்பி, மக்களை மிரட்டி பணம் வசூலிப்பது ஜனநாயக நாட்டில் மிகப்பெரிய திமிறுத்தனம் என்றார் அவர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3 முறை நோட்டீஸ் அனுப்பியும் பணத்தை தரவில்லை என்றால், சட்டத்திற்குட்பட்டு நிதி நிறுவனத்தினர் அதனை வசூலிக்க வேண்டுமென்று அவர் கூட்டத்தில் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். தொடர்ந்து, பேசிய அவர், மிரட்டி பணம் வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என்று எச்சரித்துள்ளார். இதனையடுத்து, திருச்செங்கோட்டில் கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த தம்பதியினரின் குழந்தைகளுக்கு அரசு சார்பில் வேண்டிய உதவிகளை செய்துதரப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மெகராஜ் அறிவித்துள்ளார்.