சென்னை: கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் இன்று ஆய்வு செய்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக சென்னை கோயம்பேடு சந்தை கடந்த மே மாதம் 5ம் தேதி மூடப்பட்டது. இதனையடுத்து காய்கறி மொத்த விற்பனை சந்தை திருமழிசை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மேலும் பழங்களின் மொத்த விற்பனை மாதவரம் பேருந்து நிலையத்திற்கும், பூக்களின் மொத்த விற்பனை வானகர பகுதிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டது.
இதனையடுத்து மாற்றப்பட்ட பகுதிகளில் போதிய இடவசதி இல்லாததாலும், மழை காலங்களில் அதிகளவில் காய்கறிகள் வீணாவதாலும் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்து வந்தனர். இதனால் உடனடியாக கோயம்பேடு சந்தையை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென்று தமிழக அரசை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கோயம்பேடு சந்தையில் சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், அங்காடி நிர்வாக குழு அதிகாரி கோவிந்தராஜன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். அப்போது சந்தை வளாகத்தில் 2 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டறிந்தனர். இதனையடுத்து கோயம்பேடு சந்தையை விரைவில் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வியாபாரிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.