சென்னை : கோவையில் 13 வயது சிறுவனை காவலர் தாக்கிய விவகாரம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கோவை ஒண்டிப்புதூரை அடுத்த சூர்யா நகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் யுவன். கோவையில் கடந்த 23ம் தேதி தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில் ஒண்டிப்புதூர் பகுதியில் ரோந்து பணியில் சிங்காநல்லூர் காவல்நிலைய காவலர் துர்காராஜ் ஈடுபட்டிருந்தார். அப்போது நண்பன் வீட்டுக்குச் சென்று விட்டு சக நண்பர்களுடன் யுவன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இதைக் கண்ட காவலர் உடனே சிறுவனை அழைத்து விசாரித்துள்ளார்.
அப்போது லத்தியால் சிறுவனின் கை கால்களில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சிறுவனுக்கு ரத்தக் காய தழும்புகள் ஏற்பட்டு வீங்கியுள்ளது. இதனையறிந்த யுவனின் பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பந்தப்பட்ட காவலர் மீது புகார் அளித்துள்ளனர். இதுபற்றி விசாரித்த காவல் ஆணையர் சுமித் சரண், காவலர் துர்காராஜை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.இந்த நிலையில்கோவையில் 13 வயது சிறுவனை காவலர் தாக்கிய விவகாரம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
3 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.